Wednesday, June 5, 2024
Home » பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.8.42 லட்சம் கோடி இழப்பு

பங்குச்சந்தையில் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.8.42 லட்சம் கோடி இழப்பு

by Karthik Yash

மும்பை: பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட கடும் சரிவால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.8.42 லட்சம் கோடியை இழந்தனர். மும்பை பங்குச்சந்தை நேற்று காலை 71,868.20 புள்ளிகளுடன் ஏற்றத்துடனேயே துவங்கியது. அதிகபட்சமாக 72,039.20 புள்ளிகள் வரை சென்றது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே சரிவை நோக்கி சென்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், அதிகபட்சமாக 70,234.55 புள்ளிகள் வரை சரிந்து, முடிவில் 1,053.10 புள்ளிகள் சரிந்து 70,370.55 புள்ளிகளில் நிலை பெற்றது. முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் இது 1.47 சதவீத சரிவாகும். இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 333 புள்ளிகள், அதாவது முந்தைய நாளை விட 1.54 சதவீதம் சரிந்து 21,238.80 புள்ளிகளாக இருந்தது.

கடந்த 2 வாரங்களாகவே பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. நிறுவனங்களின் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு நிதி நிலை அறிக்கைகளுக்கு ஏற்ப சந்தையின் போக்கு காணப்படுகிறது. கடந்த வாரம் எச்டிஎப்சி வங்கி நிதி நிலை முடிவுகள் மற்றும் சர்வதேச பங்குச்சந்தை சரிவால் மும்பை பங்குச்சந்தை 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.4.7 லட்சம் கோடியை இழந்தனர். இதையடுத்து முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இடியாக நேற்றைய முடிவுகள் அமைந்து விட்டன. இதுபோல் நேற்றைய பங்கு வர்த்தகத்திலும் எச்டிஎப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி பங்குகள் சரிந்தன. அதிகபட்சமாக ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவன பங்குகள் 32.73 சதவீதம் சரிந்தது. நேற்றைய சரிவால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.374.4 லட்சம் கோடியில் இருந்து, ரூ.8.42 லட்சம் கோடி சரிந்து ரூ.366 லட்சம் கோடியானது.

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகையில், சர்வதேச பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டாலும், இந்திய பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை அதிகமாக விற்றனர். குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு புதிய விதிகளை பிப்ரவரி 1 முதல் செபி அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் இந்திய பங்கு முதலீடுகளை விலக்கிக் கொண்டனர். இதுபோல், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு முடிவு தாமதம் ஆவதும் பங்குச்சந்தையின் போக்கை பாதிப்பதாக அமைந்துள்ளது என்றனர்.

* ஜீ நிறுவன பங்கு மதிப்பு கடும் சரிவு
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனத்துடன் ஜீ எண்டர்டெயின்மென்ட் என்டர் பிரைசஸ் இணைப்பு குறித்து கடந்த 2021 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். 2022 ஜூலையில் இதற்கு இந்திய பங்குச்சந்தைகள் ஒப்புதல் அளித்தன. இதற்கிடையே ஜீ நிறுவனம் மீது திவால் நடவடிக்கை கோரப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி, தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயம் இந்த இரு நிறுவனங்களும் இணைய ஒப்புதல் அளித்தது. ரூ.80,000 கோடியில் இரு நிறுவன பங்குகள் பரிமாற்றம் செய்ய இருந்த நிலையில், இந்த முடிவை கைவிடுவதாக சோனி அறிவித்தது. இதனால் ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவன பங்கு மதிப்பு 30 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. வர்த்தக முடிவில், இந்த நிறுவன பங்கு மதிப்பு ரூ.70.50, அதாவது 30.47 சதவீதம் சரிந்து, ரூ.16.90 ஆனது.

You may also like

Leave a Comment

13 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi