Thursday, May 2, 2024
Home » இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள பதநீர் கொள்முதல் நிலையத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை வேண்டும்: பனை தொழிலாளர்கள் கோரிக்கை

இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள பதநீர் கொள்முதல் நிலையத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை வேண்டும்: பனை தொழிலாளர்கள் கோரிக்கை

by Neethimaan

செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள பதநீர் கொள்முதல் நிலையத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி அதனை இடைக்கழிநாடு பேரூராட்சியில் உள்ள கூட்டுறவு பதநீர் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். மருத்துவ குணமுடைய பதநீரை பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பதநீர் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படவில்லை. பனை தொழிலாளர்கள் தாங்கள், இறக்கும் பதநீரை லாபமின்றி சாலையோரங்களில் விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காரணம் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக இயந்திரங்களோ, பனை வெல்லம் காய்ச்சுவது இல்லை. மேலும், கொள்முதல் நிலைய கட்டிடம் பழுதாகியுள்ளது.

ஆனால், வெளி மாவட்டங்களில் பதநீர் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கொண்டு வந்து கடைகளில் விற்று அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர். இதனால், இங்குள்ள பனை தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், ‘செய்யூர் தொகுதியில் பதநீர் சீசன் காலங்களில் பனை தொழிலாளர்களிடமிருந்து 30 ஆயிரம் லிட்டர் பதநீர் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தோம். ஆனால், கடந்த ஆட்சி காலத்தில் அரசு எங்களுக்கு தேவையான கொள்முதல் நிலைய விரிவாக்கம், இயந்திரங்கள், உணவு பொருள் தயாரிப்பு உபகரணங்கள் எதுவும் ஏற்படுத்திதரவில்லை. இதனால், பதநீர் இறக்குவதில் விருப்பம் காட்ட தயங்குகிறோம். எனவே, தற்போது திமுக தலைமையிலான அரசு எங்களை போன்ற பனை தொழிலாளர்களை ஊக்குவித்து கொள்முதல் நிலையத்தை விரிவாக்க செய்து எங்கள் தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என்றனர்.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi