புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா? என்பதற்கு முதல்வர் ரங்கசாமி பதிலளித்து உள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திரதினத்தையொட்டி விடுதலை போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. அப்போது முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: எப்போதும் ஒன்றிய அரசை அணுகி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கிறோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்.
அதேபோல் எம்எல்ஏக்கள், தலைவர்களை அழைத்து சென்று ஒன்றிய அரசை அணுகி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்போம் என சட்டசபையில் கூறியிருந்தேன். நிச்சயமாக எம்எல்ஏக்கள், தலைவர்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்போம். மாநில அந்தஸ்து என்பது பல ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கை. நிச்சயமாக இதனை பெறுவோம். புதுச்சேரியில் இப்போது 1,348 தியாகிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. இது ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.