சென்னை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 254 மாணவர்கள், 249 மாணவிகள் என 503 பேரை அனுப்பி வைக்கக் கோரும் கடிதங்கள் கடந்த மே 11ம் தேதி முதல் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிக்கு அந்த கடிதங்கள் சென்றதாகவும், அவற்றை அவர் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அழைப்புக் கடிதங்களை பார்த்து தொடர் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுக்க தவறியதால் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் கடிதத்தை முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்காததால் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.