சென்னை: சென்னையில் உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞரின் 100வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காந்தியின் பேரனும் மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொண்டுள்ளார். விழாவில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்,இலச்சினை வெளியிட, முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார்.புகைப்பட கண்காட்சியுடன் கலைஞரின் சாதனைகள் குறித்த ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”சென்னையில் உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்.உலகின் பல நாடுகளில் இருப்பது போன்று 25 ஏக்கர் பரப்பளவில் 5000 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மிக பிரம்மாண்டமாக பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.நட்சத்திர தங்கும் விடுதிகள், உணவகங்கள், வாகன நிறுத்தும் வசதிகள் ஆகியவை இங்கு அமையும்.தமிழ்நாட்டு இளைஞர் சக்திகளை, அறிவு சக்திகளை பூமியில் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் வகையில் இந்த அரங்கம் அமையும். வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்ப கூட்டங்கள், உலக திரைப்பட விழாக்கள் நடத்தும் வகையில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்,’என்றார்.