திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. இந்த விழா பகல்பத்து, ராப்பத்து என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும்.
பகல்பத்து உற்சவத்தின்போது நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின்போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுடன் எழுந்தருள்வார். இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்றிரவு 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. அப்போது அரையர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடினர். இதைத்தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் இன்று காலை துவங்கியது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில், ரத்தின காதுகாப்பு, வைரஅபயஹஸ்தம், லட்சுமி பதக்கம், புஜ கீர்த்தி, பவளமாலை, காசுமாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து தனுர் லக்னத்தில் புறப்பட்டு 7.30 மணிக்கு ஆழ்வார்களுடன் அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார்.
காலை 8 மணி முதல் 12 மணி வரை அரையர் சேவை நடந்தது. 12 முதல் 1 மணி வரை அலங்காரம் அமுது செய்ய திரையும், 2 முதல் 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும் நடந்தது. பிற்பகல் 3 முதல் 4 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்பட்டது. தொடர்ந்து 4.30 மணி முதல் 5 மணி வரை உபயக்காரர் மரியாதையும், 6 மணி முதல் இரவு 7 மணி வரை புறப்பாட்டுக்கு திரையிடப்படும். இரவு 7 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார். இதனால் இரவு 8 மணிக்கு மேல் மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி இல்லை.
வரும் 22ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிப்பார். 23ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதைத்தொடர்ந்து 23ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 29ம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவை, 30ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, ஜன.1ம் ேததி தீர்த்தவாரி நடக்கிறது. 2ம் தேதி நம்மாழ்வார் மோட்சம், இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவடைகிறது.