Friday, May 10, 2024
Home » இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர் அனுப்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர் அனுப்பினர்

by Karthik Yash

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 24 மீனவர்கள், கடந்த மார்ச் 24ம் தேதி 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பலில் அங்கு வந்து, மீனவர்களின் விசைப்படகுகளை மடக்கி, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி 24 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள், விசைப்படகுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இலங்கைக்கு அழைத்து சென்றனர். பின்பு மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அவசர கடிதம் அனுப்பினார். தொடர்ந்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடந்த 4ம் தேதி இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 24 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. தூதரக அதிகாரிகள் மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்து அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

மீனவர்களுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாததால், தூதரக அதிகாரிகள் அனைத்து மீனவர்களுக்கும் அவசரகால சான்றிதழ் வழங்கி, விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைப்பதற்கான விமான டிக்கெட்கள் ஏற்பாடுகளையும் செய்தது.
அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 24 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் மீனவர்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

You may also like

Leave a Comment

ten + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi