தமிழ்நாட்டில் கடந்தாண்டு (2023) டிசம்பர் மாதம் தொடக்கத்தில் வீசிய மிக்ஜாம் புயல், தலைநகரான சென்னை மட்டுமன்றி செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல், டிசம்பர் மாதத்தின் கடைசியில், தென்மாவட்டங்களில் பெய்த கடும் மழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்புயல் மற்றும் கடும் மழையால் மாநிலம் சந்தித்த இழப்புகள் ஏராளம். இதற்கு நிவாரணமாக ஒன்றிய அரசு ரூ.38,000 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் பாதிப்புகள், சேதங்கள் குறித்த புள்ளி விபரங்களும் தெள்ளத்தெளிவாக, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து, முறைப்படி அதன் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.285 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.115.49 கோடியை ஒன்றிய அரசு தற்போது விடுவித்துள்ளது. இதேபோல் வெள்ள நிவாரண பாதிப்பிற்கு, ரூ.397 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ரூ.160.61 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டு மொத்தமாக மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்காக ஒன்றிய அரசு, ரூ.276.10 கோடியை மட்டுமே தமிழ்நாட்டுக்கு விடுவித்துள்ளது. அதே நேரத்தில், கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு, தொடர்ந்து ஒன்றிய அரசின் கதவை தட்டியது தமிழ்நாடு அரசு. ஆனால், ஒன்றிய அரசு தொடர்ந்து பாராமுகமாகவே இருந்தது. பிரத்யேக பேட்டிகள் மட்டுமன்றி, தேர்தல் பிரசார கூட்டங்களிலும் இது குறித்து ஆணித்தரமான கேள்விகளை முன்வைத்து வந்தார் முதல்வர். கடும்புயல், பெரும் மழையால் தமிழ்நிலம் பரிதவித்து நின்ற போது, பிரதமரின் பாதங்கள் இங்கு படவில்லை. அதே நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது. இதனால் அவரது முழு கவனமும் தமிழகத்தின் பக்கம் திரும்பியது. தான் சார்ந்த கட்சிக்கு வாக்கு சேகரிப்பதற்காக, குறுகிய காலத்தில் பலமுறை இங்கு வந்து சென்றார் பிரதமர்.
இந்த நிலையில் தான், தற்போது ரூ.38,000 கோடி கேட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடியை வழங்கியுள்ளது. யானைப்பசிக்கு சோளப்பொரி போல் வழங்கப்பட்டுள்ள இந்த நிதி என்பது, ஒரு கண்துடைப்பாகவே உள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நிலத்தின் மக்கள் மீதும் ஒன்றிய அரசு வைத்துள்ள வன்மத்தை, ஓரவஞ்சனையை மீண்டும் ஒரு முறை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், கடந்த 19ம்தேதி நடந்து முடிந்தது. தேர்தலுக்கு முந்தைய மக்களின் மனநிலையும், அதற்கு பிந்தைய நிகழ்வுகளும், ஒன்றிய அரசை நடத்தும் கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதை உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் வெளிப்பாடாகவே, ஒப்புக்கு சப்பாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இது ஒருபுறமிருக்க, கர்நாடகாவில் முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல், நேற்றுமுன்தினம் (26ம்தேதி) நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதி நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு, ஒன்றிய அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை. இரண்டாம் கட்ட தேர்தலில், இதற்கு மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.3,454 கோடியை விடுவித்ததாகவும் சர்ச்சை தொற்றியுள்ளது. மொத்தத்தில் எல்லாமே அரசியல் தான், என்ற ரீதியில் கணக்கு போடும் ஒன்றிய அரசுக்கு, ஒற்றை விரல் புரட்சி பெரும் குட்டு வைக்கும் என்பது நிதர்சனம்.