தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவரை கைது செய்த தனிப்படையினர், மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார், தருவைகுளம் தெற்கு கல்மேடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் நின்றிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் 67 மூட்டைகளில் சுமார் 2.5 டன் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் சேகுவாரா (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பீடி இலைகளுடன் லாரி, 2 பைக்குகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகள் மற்றும் வாகனங்கள், தருவைகுளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த கடத்தல் தொடர்பாக பிரதீப் பாண்டியன், கவுதம், சரவணக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.