திருவாடானை : மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டம் சேவா கிராம பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் தாஸ் (59). இவர் ராமேஸ்வரம் ஆன்மீக யாத்திரை செல்ல திட்டமிட்டு தனக்கு சொந்தமான சைக்கிள் ரிக்ஷாவில் உடைகள் உட்பட தேவையான பொருட்களுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புறப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சி.கே.மங்கலத்திற்கு நேற்று வந்து சேர்ந்த அவர் கூறுகையில், ‘‘உலக நன்மை வேண்டி ஆன்மீக பயணம் செல்ல திட்டமிட்டேன்.
2 மாதங்களுக்கு முன்பு பயணத்தை துவக்கினேன். எனக்கு சொந்தமான சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்ய முடிவு எடுத்து ஒவ்வொரு ஊராகக் கடந்து வந்து கொண்டுள்ளேன். விரைவில் ராமேஸ்வரம் சென்று கோயிலில் தரிசனம் செய்வேன். தமிழகத்தில் பல கிராமங்கள், நகரங்களை கடந்து வந்துள்ளேன். மக்கள் அன்பாகவும் பாசமாகவும் உதவி செய்கின்றனர். அதை நினைத்தால் பெருமையாக உள்ளது’’ என்றார்.