சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021 மே மாதம் பதவியேற்ற நிலையில், திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கடந்த 2021 ஜூன் 14ம் தேதி நியமிக்கப்பட்டார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஓராண்டாக இருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயனை மீண்டும் நியமனம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். அவர், மூன்றாவது முறையாக மீண்டும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடியை அடுத்துள்ள சித்தமல்லியை சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 1999, 2004, 2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நாகை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆனவர். இவர், திமுக மாநில விவசாய அணி செயலாளராகவும் உள்ளார்.