தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. குரு பார்க்க கோடி நன்மை என சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படிப்பட்ட குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனை முன்னிட்டு மேஷ ராசியினர் மற்றும் குரு பகவான் பார்வை கொண்ட ராசியினர் தங்கள் கஷ்டங்கள், கவலைகள் குறைய வேண்டும் என இந்த நாளில் குருபகவானை வழிபாடு செய்தனர். மேலும் சனிபகவான் ஆதிக்கம் கொண்ட ராசியினரும் இந்த குரு பெயர்ச்சி மூலம் கஷ்டங்கள் கொஞ்சம் குறையும் என வழிபட்டனர். இதில் குருபகவானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குருபகவானுக்கு மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டு சென்றனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பகுதிகளுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தா.பழூர் சிவாலயத்தில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடு
previous post