சென்னை: பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனமும், கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பில் உள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பல இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். மேலும் சென்னையின் குறிப்பாக திருவல்லிகேணி, ஐஸ் ஹவுஸ், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், வேளச்சேரி மற்றும் சில பகுதிகளில் பால் விலை இமயமலையை தொடும் அளவிற்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பால் பாக்கெட் ரூ.100 வரை விற்கப்படுவதாகவும், அந்த பால் கூட கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பாலின் தேவை 4 மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் வழக்கமாக 15 லட்சம் லிட்டர் பால் தேவை இருக்கும் நிலையில் தற்போது 60 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இருப்பினும் ஆவின் பால் விநியோகத்தை சீராக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பில் உள்ளது. ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதேபோல் ஆவின் முகவர்கள், விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.