விழுப்புரம்: கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, புகார் அளிக்க சென்ற அந்த பெண் எஸ்பியை முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவர் மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ₹20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ₹500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து இருவரும் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தெரிவித்திருந்தார்.
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜரானார். தொடர்ந்து அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும்வரை, விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க தடை கேட்டுள்ளதாகவும் தெரிவித்து வாதிட்டனர். இதனை கேட்டறிந்த நீதிபதி, மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.