கோவை: தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு தொடர்பாக 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவையில் இருந்தபடியே காணொலி மூலம் தலைமைச் செயலாளர், 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தென்மாவட்டங்களில் மழை பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ள நிலையில் சாலை போக்குவரத்து, ஆகாய மார்க்கமாக பல்வேறு விதமான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இருக்க கூடிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளார். பிற்பகல் 3 மணி அளவிலே டெல்லி செல்வதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தென்மாவட்டகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் கவனம் செலுத்துமாறும், ஏற்கனவே அமைச்சர்களும், கடற்படையினரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூடுதல் அமைச்சர்களை அனுப்பி வைப்பது, ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பிவைத்து நிவாரணம், மற்றும் மீட்பு பணிகளில் கவனம் செலுத்துவது, நிவாரண முகாம்களில் மக்களை தங்கவைப்பது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நாளையும் அந்த மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆலோசனையில் இடம்பெற்றுள்ளது.