டெல்லி: தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகிறது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய அரபிக் கடலில் தாழ்வு மண்டலமாக மாறும்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் இன்று 17ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் சற்றுமுன்னர் மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகும் எனவும் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தென்காசி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். ராமநாதபுரத்திலும் தூத்துக்குடியிலும் ஒரு சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது