சென்னை: நான்கு நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர். இதனால், பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த 21 முதல் 24ம் தேதி வரை சனி, ஞாயிறு, ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்த மக்கள், விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் பெரும்பாலானோர் சென்னை திரும்பினர். ஆயிரக்கணக்கான வாகனங்களில் வருவதால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு கார். வேன் தவிர இருசக்கர வாகனங்களிலேயே சென்றிருந்தனர். தற்போது சென்னை நோக்கி திரும்பும் வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியில் அதிகளவில் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இன்று இன்னும் கூடுதலாக வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும். கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். தேவையான போலீசார் நியமித்து சென்னை செல்வதற்கு கூடுதல் கவுன்டர்களை திறந்து விட்டால் போக்குவரத்து நெரிசல் கட்டுக்குள் வரும் என்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.