ஆவடி: ஆவடி சிஆர்பிஎப் குழு மையத்தில், இந்திய அளவில் நடந்த சி.ஆர்.பிஎப் இன்டர் செக்டர் கபடி சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் தெற்கு பிராந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. சிஆர்பிஎப் விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று படைக்காகவும், நாட்டிற்காகவும் விருதுகளை வென்றுள்ளனர். அதன்படி ஆவடி சிஆர்பிஎப் குழு மையத்தில் ஜூலை 24ம் தேதி கபடி போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் பீகார், சென்ட்ரல், சத்தீஸ்கர், தகவல் தொடர்பு, டெஹராடுன், ஜார்கண்ட், கேரளா மற்றும் கர்நாடகா, மத்திய பிரதேசம், வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, ஒடிசா, ராஜஸ்தான் ஸ்ரீநகர், திரிபுரா, மேற்கு, மேற்கு வங்கம், அதிவிரைவு அதிரடி படை மற்றும் தெற்கு படைபிரிவுகளை சார்ந்த 240 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் ராஜஸ்தான் செக்டர் அணி 44-25 என்ற புள்ளி கணக்கில் கேரளா மற்றும் கர்நாடகா செக்டர் அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. அடுத்த அரை இறுதி போட்டியில் தெற்கு பிராந்திய அணி 43-30 என்ற புள்ளி கணக்கில் அதிவிரைவு அதிரடி படை செக்டர் அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை சந்தித்த, தெற்கு பிராந்திய அணி 30-33 கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் உள்ள 19 செக்டர்களில் பணிபுரியும் 230 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், சிலம்பம், கராத்தே போட்டிகள் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை சிஆர்பிஎப் துணை இயக்குனர் தினகரன் வழங்கினார். சிஆர்பிஎப் பணியாளர்களின் பயிற்சி மைய முதல்வர் காவல்துறை இயக்குனர் விஜய், சிஆர்பிஎப் சரக துணை இயக்குனர் அருள்குமார், சிஆர்பிஎப் மருத்துவமனை துணை இயக்குனர் ஜெயபாலன் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள், அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.