திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி ரூரல் துர்காசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிஷ்குமார் (35). பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த கிராமத்திற்கு வந்தார். நேற்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியை ஜோதிஷ்குமார், தனது வீட்டில் நண்பர்களுடன் அமர்ந்து டிவியில் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தார். விறுவிறுப்பான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் ஜோதிஷ்குமார் கடும் மனவேதனை அடைந்தார். அவருக்கு நண்பர்கள் ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர், நண்பர்கள் மீட்டு திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜோதிஷ்குமார் வரும் வழியில் இறந்து விட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.