திருச்சி: திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், ஆண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்து சென்று சோதனை செய்ததில், அவரது டிக்கெட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்த 1,091 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு ₹67.05 லட்சம்.
இதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு ஆண் பயணியின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களுக்குள் மறைத்து எடுத்து வந்த 279 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.17.14 லட்சம். தங்கத்தை கடத்தி வந்த இருவரிடமும் அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் 1,370 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.84.20 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.