Sunday, June 16, 2024
Home » பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கும் வழிகாட்டும் ஸ்மிதா!

பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கும் வழிகாட்டும் ஸ்மிதா!

by Porselvi

‘எனக்கு ஏன் இந்த நிலை… நான் என்ன தவறு செய்தேன்?!‘ இதுதான் ஸ்மிதா பாரதி தனக்குத் தானே கேட்டுக்கொண்ட கேள்வி. 1987ல் அவருக்குத் திருமணம். தொடர்ந்து திருமண பந்தம் அவருக்கு மகிழ்வானதாக இல்லாமல் மாறாக நரகமாக இருந்திருக்கிறது. தொடர்ந்து 8 வருடங்கள் அதில் தன்னால் இயன்ற வரை போராடி காயப்பட்ட ஸ்மிதா, இதற்கு மேலும் இது வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டார்’. இதோ முப்பது வருடங்கள் கழித்து இன்று இந்தியாவே திரும்பிப் பார்க்கும் படி பல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருக்கிறார் ஸ்மிதா பாரதி.

‘சொந்த ஊர் சட்டிஸ்கர். என்னுடைய ஐந்து வயதிலேயே மேடை நாடகங்களுக்குப் பழக்கப்பட்டவள் நான். எல்லா பெண்களைப் போலத்தான் நானும் திருமண வாழ்க்கையில் கனவுகள், ஆசைகள் ஒருசேர வாழ்க்கையைத் துவங்கினேன். ஆனால் விதி எனக்கு வேறு ஒரு அனுபவத்தைக் கொடுக்கக் காத்திருந்தது. தினம் தினம் உடலாலும், மனதாலும் காயப்பட்டு என் குழந்தைக்கு முன்பும் என் கஷ்டத்தைக் காட்டிக்கொள்ள இயலாமல் வாழப் பழகிக் கொண்டேன். இந்திய கலாச்சாரம் பொருத்தவரை பெண்கள் திருமண வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பொருத்துக்கொண்டு வாழ வேண்டும் என்பதுதான். நானும் எவ்வளவோ சகிப்புடன் எட்டு வருடங்களை ஓட்டினேன். ஆனால் இதற்கு மேலும் முடியாது என திருமண வாழ்க்கையை உதறி விட்டு வெளியேறி, என் ஆத்மாவுக்கு ஆறுதல் கொடுத்த நாடக மேடை களத்திற்கே மீண்டும் ஓடி வந்தேன்.

தொடர்ந்து நடிப்புடன், நானே கதைகளும் எழுதத் துவங்கினேன். சில கதைகள் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் விதத்தில் நானே எழுதி இயக்கினேன்’ என்னும் ஸ்மிதா பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையில் கைகொடுக்கத் துவங்கியிருக்கிறார். ‘என்னைப் போலவே எத்தனையோ பெண்கள் வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டு, கிடைத்த வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டி போராடிக்கொண்டும் இருப்பார்களே என்னும் தவிப்பு எனக்குள் எழுந்தது. அதன் விளைவு சாக்‌ஷி தன்னார்வலர் அமைப்பில் என்னை இணைத்துக்கொண்டேன். இன்றுடன் 29 வருடங்கள் கடந்துவிட்டன. பாலியல் துன்புறுத்தல், கசப்பான திருமண வாழ்க்கை, டொமெஸ்டிக் வயலென்ஸ் எனப்படும் குடும்ப வன்முறை உள்ளிட்ட அனைத்திலும் என்னைத் தேடி வரும் பெண்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் கொடுத்து அவர்களை மீட்கிறேன். மேலும் தங்களின் கதைகளை மற்ற பெண்களுக்குக் கூறி தன்னம்பிக்கை ஊட்டவும் களம் அமைத்துக் கொடுக்கிறோம்.

குறிப்பாக தங்கள் கதைகளை சொல்லவே யோசிக்கும் பெண்களுக்கு போதுமான தைரியம் கொடுத்து அவர்கள் பெண்ணாக பிறந்ததன் நோக்கத்தை எடுத்துக் கூறி அவர்களையே அவர்களால் கொண்டாட வைப்பதே சாக்‌ஷி அமைப்பின் நோக்கம். இங்கே எந்தப் பெண்ணும் தனக்கான கொடுமையை எடுத்துச் சொல்லி நியாயம் கேட்கலாம். அல்லது தன் கதை மூலம் மற்ற பெண்களுக்கு வழிகாட்டலாம்‘ என்னும் ஸ்மிதா பாரதி இந்திய அரசுடன் இணைந்து பெண்கள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, உடல், மன ரீதியான தாக்குதல்கள் என பெண்கள் மற்றும் வளர்ந்த இளம் பெண்களின் பிரச்னைகள் பலவற்றிற்காகவும் சேவை செய்து வருகிறார். பெண்கள் பிரச்னைகள் சார்ந்த 15க்கும் மேலான நாடகங்கள் எழுதி இயக்கியிருக்கிறார்.

சமூக மாற்றத்தில் பங்கு கொடுத்தமைக்காக கர்மவீர் சக்ரா விருது, ஷி விருது மற்றும் ஜக் ஜக் ஜியோ விருது என பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் ஸ்மிதா. இந்திய அரசின் பெண்கள் கடத்தல் மற்றும் வியாபாரத்திற்காக குழந்தைகள் கடத்தல் பிரிவு மத்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பதவியில் இருக்கிறார். ‘ இந்தியப் பெண்களுக்கு காலம் காலமாகவே திருமணம்தான் அவர்களின் ஆகச் சிறந்த சாதனையாகவும், குடும்ப வாழ்க்கையில் அவர்களின் சகிப்புத் தன்மையும் தான் பெண்மையின் நோக்கம் என்பது போல் போதிக்கப்படுவதால்தான் பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகள் குறித்து வெளியே சொல்வதே இல்லை. மேலும் பிரச்னைக்குரிய வாழ்க்கையில் இருந்து வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் கடைசி வரை இதுதான் நம் விதி என அடிப்பட்டு கடைசியில் உயிரையே கூட கொடுக்கும் அளவிற்கு செல்கிறார்கள். இந்த நிலையை மாற்றத்தான் என்னைப் போல பலரும் போராடிக் கொண்டிருக்கிறோம்’ என்னும் ஸ்மிதா பாரதி பல அரசுப் பள்ளிகளுக்கும் கூட சென்று ஒர்க் ஷாப், கூட்டங்கள் என நடத்தி வருகிறார்.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

18 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi