சிவகாசி: சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து நாசமாகின.விருதுநகர் மாவட்டம் சிவகாசி வேலாயுத ரஸ்தா சாலையில் வசித்து வருபவர் அதிபதி கிரகதுரை. இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை சிவகாசி-விருதுநகர் சாலையில் திருத்தங்கல் காமராஜர் சிலை அருகில் உள்ளது. இந்த தீப்பெட்டி ஆலையில் நள்ளிரவு சுமார் 1 மணிஅளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது.
இதனை கவனித்த அந்த பகுதி மக்கள், சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.