Thursday, May 23, 2024
Home » 3 ஆண்டாக தலைமறைவாக இருந்த கொலைக்குற்றவாளி சிவகாசியில் கைது

3 ஆண்டாக தலைமறைவாக இருந்த கொலைக்குற்றவாளி சிவகாசியில் கைது

by Lakshmipathi

*தனிப்படைக்கு திருவாரூர் எஸ்.பி. பாராட்டு

திருவாரூர் : 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை சிவகாசியில் நேற்று திருவாரூர் போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா மற்றும் மது விற்பனை, புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2 மாதத்தில் மட்டும் 227 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களில் 70 பேர் வரையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் அதனை பயன்படுத்துதல் குறித்து பொது மக்கள் எஸ்.பி அலுவலகத்திற்கு 9498100865 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவித்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றசம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக கொலை, கொலை முயற்சி, கொள்ளை, அடிதடி, ரவுடிசம் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் கடந்த 3ம் தேதி இரவு முதல் 4ம் தேதி அதிகாலை வரை விடிய விடிய மாவட்டம் முழுவதும் அந்தந்த டி.எஸ்.பிக்கள் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் திருவாரூர் தாலுக்கா காட்டூரில் கடந்த 2021ம் ஆண்டு குமரேசன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அகரதிருநல்லூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் கலைச்செல்வன் (28) என்பவர் தாலுக்கா போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவர் மீது பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, கோவை, நாமக்கல் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தனிப்படையினர் தேடி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பதுங்கியிருந்த கலைச்செல்வனை சப்இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று கைது செய்தனர்.

அவரை திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை கிளைச்சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாரை எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டினார். இதேபோன்று மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

8 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi