திருக்கழுக்குன்றம்: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்திமங்கலம் மற்றும் புலிக்குன்றம் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி களின் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் தொழிலாளர் முன்னணி ஒன்றிய துணை அமைப்பாளர் ராஜவளவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட கட்சியின் மண்டல செயலாளர் வீ.கிட்டு, மாவட்ட செயலாளர் கனல் விழி ஆகியோர் மாணவ – மாணவிகள் 250க்கும் மேற்பட்டோருக்கு பேனா, பென்சில்களை வழங்கினர்.