புழல்: புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை காவலர்கள் சோதனையில் அவ்வப்போது, சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தண்டனை சிறையில் சிறை காவலர்கள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குளியலறை அருகே மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சிம்கார்டு ஒன்று மீட்கப்பட்டது. இதனையடுத்து சிம்கார்டை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.