Wednesday, June 12, 2024
Home » மவுனம் காக்கும் மாஜி அமைச்சர் மேல சேலம்காரர் அதிருப்தியா இருக்கும் விஷயம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

மவுனம் காக்கும் மாஜி அமைச்சர் மேல சேலம்காரர் அதிருப்தியா இருக்கும் விஷயம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘தென் மாவட்டங்களில் எங்கு பிரச்னை நடந்தாலும், குமரி மாவட்டத்தில் இருந்து தான் பந்தோபஸ்து டூட்டிக்கு ஆட்களை அனுப்புறாங்கனு காக்கி வட்டாரத்துல இருந்து புகார் வருதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. பக்கத்து மாவட்டமான நெல்லை மாவட்டத்தில் நடந்த ஒரு பிரச்னைக்கு கடந்த 3 மாசமாக, குமரியில் இருந்து போய் போலீஸ் பாதுகாப்புக்கு இருக்கிறாங்களாம். இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசுனு 60 பேர் இப்படி பாதுகாப்புக்காக போய் வருகிறார்களாம். 3 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் 60 பேரை மாற்றி, மாற்றி அனுப்பி வைக்கிறார்களாம்.

ஆனால் குமரி மாவட்டத்தில் ரோந்து பணி, பெட்டிஷன் விசாரிப்பு உள்ளிட்டவற்றுக்கு போலீஸ் இல்லையாம். இப்போது தீபாவளி, கிறிஸ்துமசுன்னு குமரி மாவட்டத்திலும் விழாக்காலம் வர போகுது. சபரிமலை ஐயப்பன் சீசன் காலத்தில் கன்னியாகுமரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அடுத்த மாசம் சீசன் தொடங்கி விடும். நிலைமை இப்படி இருக்க வெளி மாவட்ட பந்தோபஸ்து பணிக்காக 60 பேரை கொடுத்துட்டு, உள்ளூரில் இருக்கிற போலீசாரை பாடாய்படுத்தி எடுக்கிறாங்களாம். புதுசா பொறுப்பேற்று உள்ள எஸ்.பி.யாவது, மாவட்டத்தின் நன்மை கருதி, இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பாரா, டிஐஜி கவனத்துக்கு இந்த பிரச்னை போகுமா என்று காக்கிகள் நொந்து போய் எதிர்பார்ப்பில் உள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அடங்காத ஆட்டத்தால், நாலாவது முறையாக சிக்கியிருக்காராமே பெண் இன்ஸ்பெக்டர்..’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாடு – கேரள ஸ்டேட் பார்டர்ல புளி என்று தொடங்குற செக்போஸ்டுல, டிரைவர்ஸ் கிட்ட ப வைட்டமின் வாங்குனதாக மோட்டார் வாகன லேடி இன்ஸ்பெக்டர் சிக்குனாங்க. அவங்க கார்ல கணக்குல வராத 2.76 எல் பறிமுதலும் செஞ்சாங்க. இந்த பெண் இன்ஸ் ஏற்கனவே பணியாற்றிய இடங்கள்ல ப வைட்டமின் இல்லாம எந்த வேலையும் செய்யமாட்டாங்களாம்.

இதுல குறிப்பாக வெயிலூர் மாவட்டத்துல பணியில இருந்தபோது, தமிழ்நாடு – ஆந்திரா ஸ்டேட் பார்டர்ல இருக்குற செக்போஸ்ட்ல, அந்த வழியாக வர்ற லோடு வாகன டிரைவர்ஸ் கிட்ட ப வைட்டமின் வாங்கிட்டுதான் செக்போஸ்ட கடக்க விடுவாங்களாம். ப வைட்டமின் இல்லைன்னா செக்போஸ்ட்டுலேயே நிக்கவெச்சிடுவாங்களாம். அதோடு, ஆந்திராவுல இருந்து காய்கறி, பழங்களை ஏற்றி வர்ற லாரிகள்ல இருந்து தேவையான காய்கறி, பழங்களை வாங்கிக்கிட்டுதான் போகவிடுவாங்களாம். இப்ப கேரள பார்டர்ல 4வது முறை இவங்க சிக்கியிருக்காங்க.

ஏற்கனவே சிக்குனபோது, அவங்க மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தா பணியிட மாறுதலாகி போன இடத்துலயாவது சரியா வேலை செஞ்சிருப்பாங்கன்னு வெயிலூர்ல இருக்குற அவங்க டிபார்ட்மெண்ட்லயே பரபரப்பாக பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கல்லா கட்டுறதுலயே குறியா இருக்கிற ஆபீசர் மேல ரொம்ப கம்ப்ளெய்ன்ட் வருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முதல் படை வீட்டில் உள்ள யூனியன் அலுவலக பொறுப்பில் இருக்கும் கடவுள் பெயர் கொண்ட அலுவலர் கமிஷன் கல்லா கட்டுவதில் படு ஆக்டிவாக இருக்கிறாராம். இவரின் செயல்பாட்டால் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி உடன் பணியாற்றும் அலுவலர்கள் வரை அனைவரும் அலறியடித்து ஓடுகின்றனராம்.

இவரின் தொல்லைக்கு பயந்து சில ஒப்பந்ததாரர்கள் வேலையே வேண்டாம் என முழுக்கு போட்டு விடுகின்றனராம். பில் தொகைக்கு கமிஷன் கேட்டால் பரவாயில்லை, ஆர்டர் கொடுப்பதற்கே கமிஷன் தரணுமாம். இல்லாவிட்டால், ஏதாவது ஒரு தடை போட்டு வேலையை நடக்க விடாமல் தடுக்கிறாராம். இதனால் சில முக்கியமான அரசுக்கு வருவாய் தரக்கூடிய பணிகள் கூட நடைபெறவிடாமல் இழுத்தடிக்கிறாராம். இதனால் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லவிடாமல் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதாக கவுன்சிலர்களே புலம்புகின்றனராம்.

ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ள இவர் மீதும் விரைவில் ரெய்டு பாயும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாஜி அமைச்சர் மீது சேலத்துக்காரர் அதிருப்தியா இருக்காராமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் முன்னாள் அமைச்சர் கட்சியில் பெரிதாக ரியாக்‌ஷன் கொடுக்காமல் இருந்து வருகிறாராம். தேனிக்காரர் மற்றும் சின்னமம்மி குறித்தும் வெளிப்படையாக பேசாமல் மவுனமாக இருக்கிறாராம். அவர்கள் 2 பேருக்கு எதிராக வாய் திறக்காதது ஏன் என்பதுதான் தொண்டர்களிடம் பெரும் கேள்வியாக உள்ளதாம்.

மாஜி அமைச்சரின் இந்த செயல்பாடு குறித்து சேலத்துக்காரருக்கு தகவல் சென்றுள்ளதாம். மேலும் மன்னர் மாவட்டத்தில் தனக்கு வேண்டிய மற்றும் நம்பிக்கையான நபர்களை பொறுப்பில் நியமிக்க வேண்டும் என இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், சேலத்துக்காரரிடம் தெரிவித்துள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பல கோடிகளை அமுக்கிய ஜெயில் ஆபீசர்ஸ் பத்தி சொல்லுங்க..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் உள்ள 9 மத்திய சிறைகளிலும் தண்டனை கைதிகளுக்கு கல் உடைப்பது, செக்கிழுப்பது போன்ற கஷ்டமான வேலை வழங்காமல், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான மூலப்பொருட்கள் வெளி இடங்களில் இருந்து வாங்கி, பொருட்களாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருது. தயாரிக்க முடியாததை தயாரித்ததா சொல்லி தூங்கா நகரத்து ஜெயில் ஆபீசர்ஸ், பல கோடிகளை அமுக்கிட்டாங்களாம். இது அத்தனையும் இலைக்கட்சி ஆட்சியில நடந்திருக்கு. இது தொடர்பாக அரசுக்கு புகார் சென்றதும், நேர்மையான அதிகாரிகள் விசாரிச்சிருக்காங்க. அது உண்மை என தெரியவந்ததையடுத்து விஜிலென்ஸ் அதிகாரிகள் களம் இறக்கப்பட்டிருக்காங்களாம். கீழ் மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை, தங்க முட்டையிடும் வாத்தை அறுத்தது போல இந்த மோசடி நடந்திருக்காம். இதுல முக்கியமான ஐந்து அதிகாரிகள் விஜிலென்ஸ் வலையில சிக்கப்போறாங்களாம்.

அதே போல, மாங்கனி ஜெயிலிலும் இந்த நிலைதானாம். இங்கும் இலைக்கட்சி ஆட்சியில, ஜெயில் அதிகாரி கொடுத்த செக் ரிட்டனாகி வந்துட்டாம். அப்படின்னா கணக்குல இருந்த பணம் எங்கே போச்சுன்னு தேடும் போது தான், அனைத்தையும் கீழ் மட்ட அதிகாரி ஆட்டைய போட்டது தெரிஞ்சதாம். கைதிகளுக்கு உறவினர்கள் அனுப்பும் மணியார்டரை, அவர்களின் ேநாட்டுல எழுதாம லபக்கிட்டாராம். இது பல லகரங்களை தாண்டுமாம். இங்கும் என்கொயரி தொடங்கியிருக்காம். இதனால மாங்கனி, தூங்கா நகரத்து ஜெயில் ஆபீசர்ஸ் நிலை ஆட்டம் கண்டிருப்பதாக நேர்மையான வார்டர்கள் நெஞ்சை நிமித்தி சொல்றாங்க’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

thirteen + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi