* கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் அறையில் தஞ்சம்
* குழந்தை நல அதிகாரிகள், போலீசார் விசாரணை
சென்னை: முகப்பேரில் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த சிறுமியை அடித்து உதைத்து, உடல் முழுவதும் சூடு வைத்து சித்தி, சித்ரவதை செய்ததால், அங்கிருந்து தப்பிய சிறுமி, அடுக்குமாடி குடியிருப்பின் மோட்டார் அறையில் தஞ்சமடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக, சித்தி மற்றும் தந்தையிடம் குழந்தை நல அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாராபுரம் அருகே பொன்னாவரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி கீர்த்தனா (30). இவர்களுக்கு ருத்திதா (9) என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், ரமேஷும், கீர்த்தனாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அன்று முதல் மகள் ருத்திதாவை, ரமேஷ் வளர்த்து வருகிறார். தற்போது, அங்குள்ள தனியார் பள்ளியில் ருத்திதா 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா (32) என்பவரை ரமேஷ் 2வது திருமணம் செய்து கொண்டார். கீர்த்தனாவுக்கு, ஏற்கனவே முதல் கணவர் மூலம் தனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 5 வருடங்களாக தனது 2வது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் வாடகை வீட்டில் ரமேஷ் வசித்து வந்தார். ஆரம்பத்தில், ருத்திதாவை தனது சொந்த மகள் போல் கீர்த்தனா வளர்த்து வந்துள்ளார். பின்னர், என்ன காரணத்தினாலோ ருத்திதாவை, சித்தி கீர்த்தனாவுக்கு பிடிக்காமல் போனது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ள ஆரம்பித்தார். இதனால், கடந்த சில மாதங்களாகவே சிறுமி ருத்திதாவுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்காமல் கீர்த்தனா அடித்து கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், கணவன் இல்லாத நேரத்தில், ருத்திதாவை அடித்து உதைத்தும், சூடு வைத்தும் துன்புறுத்தி உள்ளார். ஒருகட்டத்தில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து, அருகிலுள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் மோட்டார் அறையில் நேற்று முன்தினம் மாலை ருத்திதா பதுங்கி இருந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி மின் மோட்டாரை இயக்க வந்தபோது, மோட்டார் அறைக்குள் ஒரு சிறுமி அழுதவாறு பதுங்கியிருப்பதை பார்த்து, அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர், சிறுமியிடம் விசாரித்தபோது, கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து, வெளியே வந்த ருத்திதாவின் உடலின் பல்வேறு இடங்களில் தழும்புகள் மற்றும் தீக்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு காவலாளி உடனே தகவல் தெரிவித்தார். இதற்கிடையே, தங்கள் மகள் ருத்திதாவை காணவில்லை என நொளம்பூர் போலீசில் நேற்று முன்தினம் மாலை ரமேஷ், கீர்த்தனா புகார் அளித்தனர். சிறுமியின் புகைப்படத்தை வைத்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இதை தொடர்ந்து காவலாளி அளித்த தகவலின்பேரில், நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, அந்த சிறுமி ருத்திதா என தெரியவந்தது.
சிறுமியின் தலை, 2 கைவிரல்கள் மற்றும் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சைல்டு ஹெல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சென்னை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் காஞ்சனா, ஜோயல் உள்பட 3 அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சிறுமி ருத்திதாவை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், ருத்திதாவின் தலை, கை தோள்பட்டை, வாய், முதுகு, 2 கைவிரல்கள் ஆகியவற்றில் காயங்கள் இருப்பதாக கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ருத்திதாவின் தந்தை ரமேஷ், அவரது 2வது மனைவி கீர்த்தனா ஆகியோரிடம் குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் நொளம்பூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.