நைனிடால்: கடைநிலை ஊழியரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் உத்தரகாண்ட் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ருத்ரபிரயாகை மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர் அனுஜ்குமார் சங்கால். இவர்,உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பதிவாளராகவும் இருந்துள்ளார். மாவட்ட நீதிபதி அனுஜ்குமார் சங்காலின் வீட்டில் நான்காம் நிலை அரசு ஊழியர் ஹரீஷ் என்பவர் பணிபுரிந்தார். அப்போது ஹரீஷை நீதிபதி கடுமையாக துன்புறுத்தியுள்ளார். வேலையில் இருந்து அவரை நீக்கி விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதில் மன உளைச்சல் அடைந்த ஹரீஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொறுப்பு) மனோஜ் திவாரி, அனுஜ் குமார் சங்காலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியரை துன்புறுத்துவது, வேலையில் இருந்து நீக்குவேன் என மிரட்டுவது மனிதநேயமற்ற நடவடிக்கையாகும். நீதித்துறை அதிகாரி ஒருவர் இப்படி நடந்து கொள்வது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.இது உத்தரகாண்ட் அரசு ஊழியர்கள் விதிகளுக்கு எதிரானதாகும் என அவர் கூறியுள்ளார்.