சென்னை: சென்னை அசோக் நகர் 10வது அவென்யூ வழியாக நேற்று மாலை சென்ற காவல் துறை கார் திடீரென மின்னல் வேகத்தில் தாறுமாறாக ஓடி, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது, பிறகு சாலையோர அழகு பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. இதனால் கடைக்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் சாலையோரம் நடந்து சென்ற பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பொதுமக்கள் திரண்டபோது, காரில் இருந்த 2 காவலர்களும்போதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.
தகவலறிந்த குமரன் நகர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்திய போது, நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபியிடம் பணியாற்றும் காவலர்கள் தர் மற்றும் அருண்மணி என தெரியவந்தது. இருவரும் கூடுதல் டிஜிபி வெளியூருக்கு ெசன்றதால், பணி நேரத்தில் மதுபானம் குடித்துவிட்டு காவல்துறைக்கு சொந்தமான காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து விபத்துக்குள்ளான போலீஸ் வாகனம், பைக்குகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், போதையில் விபத்தை ஏற்படுத்திய காவலர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். விபத்தின் போது உயிர் சேதம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.