ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கடையை உடைத்து 2 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர், பாஞ்சாலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (36). இவர், குடியிருக்கும் வீட்டின் கீழ் தளத்தில் கோல்ட் மற்றும் சில்வர் கவரிங் ஜூவல்லரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, ஷட்டரை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கடையின் பூட்டு உடைக்கும் சத்தம்பேட்டு, பிரவீன் வீட்டின் கீழ் தளத்தில் வந்து பார்த்தார். அப்போது, கடையின் ஷட்டர் உடைத்து, லாக்கரில் இருந்த 2 கிலோ வெள்ளியை திருடிக்கொண்டு, சிசிடிவியை கேமராவை உடைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கௌதம், சரவணன் ஆகிய 2 போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் தப்பி சென்றவர்களை துரத்திச்சென்று, ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது, கொள்ளையர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, கொள்ளையர்கள் தப்பிசென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த 2 போலீசார், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.