மும்பை: ரஞ்சி கோப்பை 2வது அரையிறுதியில் தமிழ்நாடு அணியுடன் மோதும் மும்பை அணி, முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது. பந்த்ரா குர்லா வளாக மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 146 ரன்னுக்கு சுருண்டது (64.1 ஓவர்). விஜய் ஷங்கர் 44 ரன், வாஷிங்டன் சுந்தர் 43 ரன் எடுத்தனர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி முதல் நாள்முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 2வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 353 ரன் (100 ஓவர்) குவித்துள்ளது. முஷீர் கான் 55 ரன், கேப்டன் ரகானே 19, ஹர்திக் தமோர் 35 ரன் எடுக்க, அதிரடியாக விளையாடிய ஷர்துல் தாகூர் 109 ரன் (105 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். மும்பை 290 ரன்னுக்கு 9வது விக்கெட்டை இழந்த நிலையில், தனுஷ் கோடியன் – துஷார் தேஷ்பாண்டே ஜோடி கடைசி விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
தனுஷ் கோடியன் 74 ரன், தேஷ்பாண்டே 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 1 விக்கெட் இருக்க மும்பை 207 ரன் முன்னியுடன் வலுவான நிலையில் உள்ளது. தமிழ்நாடு பந்துவீச்சில் கேப்டன் சாய் கிஷோர் 37 ஓவரில் 9 மெய்டன் உள்பட 97 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றினார். குல்தீப் சென் 2, சந்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது. விதர்பா திணறல்: நாக்பூரில் மத்திய பிரதேசத்துடன் நடக்கும் முதல் அரையிறுதியில் டாஸ் வென்று பேட் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 170 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 47 ரன் எடுத்திருந்த மத்திய பிரதேசம், 2ம் நாளான நேற்று 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தொடக்க வீரர் ஹிமான்ஷு அதிகபட்சமாக 126 ரன் விளாசினார். 82 ரன் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி, 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன் எடுத்துள்ளது. துருவ் ஷோரி 10, அக்ஷய் வாக்கரே 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.