*மர்ம ஆசாமிகளுக்கு வலை
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே உள்ள ஈருடையாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி மனைவி எலிசபெத் ராணி (57), இவர் கடந்தசில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த எலிசபெத் ராணி மற்றும் அவரது உறவினர்கள் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறி கிடந்தன.
உடனடியாக இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் விசாரணை செய்ததில், எலிசபெத் ராணியின் மகன் திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் 6,500 ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும் கைரேகை நிபுணர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கைரேகையை பதிவு செய்தார். மேலும் இதுகுறித்து மூங்கில்துறைபட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த நகை, பணம் கொள்ளைபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.