சண்டிகர்: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக மாஜி அமைச்சர் சந்தீப் சிங், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிக்கை விடுத்ததால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், அரியானா பாஜக முன்னாள் அமைச்சருமான சந்தீப் சிங் (37) மீது கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதையடுத்து அவர் மீது சண்டிகர் போலீசார் ஐபிசியின் 354, 354 ஏ, 354 பி, 342, 506, 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு சண்டிகர் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சந்தீப் சிங்குக்கு எதிராக 700 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து மே மாதம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.