தாம்பரம்: தாம்பரம் அருகே ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த புரோக்கரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பெண்கள் மீட்கப்பட்டனர். தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் வால்யூம் சலூன் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக சேலையூர் காவல் உதவி ஆணையர் முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் 5 பெண்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்பா உரிமையாளர் ராஜராஜன் (36) என்பவர் புரோக்கராக செயல்பட்டு திருச்சி, விருதுநகர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கணவர்களால் கைவிடபட்ட பெண்களை மூளை சலவை செய்து, ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அங்கிருந்து, 5 பெண்களை மீட்டு, அருகில் உள்ள மகளிர் விடுதியில் சேர்த்தனர். பின்னர், புரோக்கர் ராஜராஜன் மீது வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்: பெரும்பாக்கம், ருக்குமணி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஆயுர்வேதிக் கிளினிக் மற்றும் மசாஜ் சென்டர் என்ற பெயரில், பாலியல் தொழில் நடைபெறுவதாக, பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை செய்தபோது, சதீஷ் விக்டர் என்பவர், பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. அங்கிருந்து 5 இளம்பெண்களை மீட்டனர். விசாரணையில், டெலிகாலர் வேலைக்கு ஆட்கள் தேவை, அதிக சம்பளம் என விளம்பரப்படுத்தி கேரளா, விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்களை வேலையில் அமர்த்தி, நாளடைவில் அவர்களுக்கு நிறைய சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இங்கு பாலியல் புரோக்கர்களான கள்ளக்குறிச்சி மாவட்டம், பழைய சிருவாங்கூர், செக்கு மேட்டு தெருவை சேர்ந்த பி.பி.ஏ.பட்டதாரி சூர்ய தேவன் (23), திருவண்ணாமலை மாவட்டம், தண்டரம்பேட்டை, கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி மகராசு (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளர் சதீஷ் விக்டரை தேடி வருகின்றனர்.