திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர் அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் கழிவுநீரை குடியிருப்புகளின் (நடுவே) சாலையின் குறுக்கே விடுவதால், சாக்கடை கழிவுநீர் கடும் துர்நாற்றம் வீசிகிறது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த கழிவுநீர் ஓடைக்கு சற்று அருகாமையில் அரசு துவக்கப் பள்ளி இயங்குவதால் பள்ளிக்கு சிறுவர், சிறுமியர் கழிவு நீரிலேயே நடக்கின்றனர். இதனால், சிறு குழந்தைகள் நல்ல நீரில் விளையாடுவது போல் கழிவு நீரில் ஆட்டம் போடுகிறார்கள். கடந்த சில தினங்களாகவே பள்ளி குழந்தைகள் பலருக்கு அம்மை நோய் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த கழிவு நீரைக் கடந்துதான் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் கழிவு நீரை பொது சாலையில் விடுகின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகிறது. பள்ளிக்கு அருகிலேயே இந்த கழிவுநீர் வழிந்தோடுகிறது. எனவே, நிரந்தரத்தீர்வாக கழிவுநீர் சாலையில் விடாமல் தடுப்பதுடன் உடனடியாக அப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றனர்.