மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, மயக்க அடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி மற்றும் வீட்டு உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியை சேர்ந்தவர் வனமுத்து. அங்கு, ஈசிஆர் சாலையொட்டி காயலான் கடை வைத்துள்ளார். இவரது, வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கிருஷ்ணன் காரணையில் கழிவுநீர் எடுக்கும் லாரி வைத்திருக்கும் யுவராஜ் என்பவரின் லாரியை வரவழைத்து கடந்த 19ம் தேதி இரவு சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, உதவிக்கு புதிய கல்பாக்கத்தில் இருந்து அண்ணாமலை (36), மணி (32) ஆகியோரை வீட்டின் உரிமையாளர் வனமுத்து அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது, திடீரென இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அண்ணாமலை, மணி இருவரும் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர் வனமுத்து எட்டிப் பார்த்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயக்கமடைந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மணி சாதாரண வார்டில், அண்ணாமலை தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டிலும் அனுமதித்தனர். அங்கு, 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அண்ணாமலை சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மணி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடநெம்மேலியை சேர்ந்த வீட்டு உரிமையாளர் வனமுத்து (52), கிருஷ்ணன் காரணையை சேர்ந்த கழிவுநீர் லாரி உரிமையாளர் யுவராஜ் (40), செம்பாக்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் குப்பன் (45) ஆகிய 3 பேர் மீதும் மாமல்லபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அண்ணாமலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.