டெல்லி: செந்தில்பாலாஜி மீதான பண மோசடி வழக்கின் விசாரணையை செப்.30க்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அசாதுதீன் அமனுல்லா அடங்கி அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 3 வழக்கு தொடர்பாக 152 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்ன? என்று பாதிக்கப்பட்ட நபர் வாதம் செய்தார். புலன் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை அளிக்க எவ்வளவு அவகாசம் தேவை என்ற தெளிவான கோரிக்கை இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே இந்த விஷயத்தில் நேரில் வந்து கேட்கட்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. வழக்கில் பலரிடமும் வாக்குமூலங்களை பெறுவது கடினமான பணி என்பதால் அவகாசம் தேவை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. விசாரணையை முடிக்க 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 6 மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது; குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். அரை மணி நேரத்தில் எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை குறிப்பிடுகிறோம் என்று தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்தது. உங்களுக்கு பிரச்னை என்பது எப்போதும் இருந்துகொண்டே தான் இருக்கும். இந்த வழக்கில் போலீஸ் நினைத்தால் 24 மணி நேரத்தில் முடிப்பீர்கள்; 24 ஆண்டானாலும் வேலையை முடிக்காமல் இருப்பீர்கள்.
அரசுகள் எப்படி செயல்படும் என்பது எங்களுக்கு தெரியும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம் செய்தனர். தொடர்ந்து, விளக்கம் அளிக்க தமிழக மத்திய குற்றப்பிரிவுக்கு 30 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இல்லையெனில் தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆஜராக ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கு விசாரணையை செப்டம்பர் 30க்குள் விசாரித்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 மாத அவகாசம் தேவை என்ற தமிழக குற்றப்பிரிவு காவல்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. செப்டம்பர் 30க்கு மேல் எந்த கால அவகாசமும் வழங்கப்படாது என மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விசாரணையை முடிக்காவிடில் சிறப்பு புலனாய்வுகுழு அமைக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.