சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 20ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, நவம்பர் 22ம்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில்பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.