சென்னை: செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள், மூத்த வழக்கறிஞர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி உள்ளிட்டோருடன் மூத்த வழக்கறிஞரும் எம்.பி.யுமான வில்சனும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் விசாரணைக்காக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அடுத்த 10 நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து 2.30 மணியளவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனிடையே செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து திமுக செய்துள்ள முறையீடு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஐகோர்ட்டில் விசாரணை நடைபெறவுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரச ஆலோசனை நடத்தி வருகிறார்.