Friday, June 14, 2024
Home » மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பு முடிவு இமாச்சலில் 9 பேர் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜ வெற்றி

மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பு முடிவு இமாச்சலில் 9 பேர் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜ வெற்றி

by Ranjith

* கர்நாடகாவில் 3 இடங்களில் காங். வெற்றி உ.பியில் சமாஜ்வாடி எம்எல்ஏக்கள் 7 பேர் பாஜவுக்கு ஓட்டு

சிம்லா: கர்நாடகா, இமாச்சல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கர்நாடகாவில் காங்கிரஸ் 3 இடங்களிலும் பாஜ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இமாச்சலில் 9 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் ஒரே இடத்தில் காங்கிரசிடமிருந்து பாஜ வெற்றியை பறித்தது. உபியிலும் 9 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜ 8 இடங்களை கைப்பற்றியது.  நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

56 இடங்களுக்கு 59 வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இவர்களில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் எல்.முருகன், அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட 41 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக கடந்த 20ம் தேதி அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 15 இடங்களுக்கு மட்டும் நேற்று தேர்தல் நடந்தது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலில் 1 இடத்திற்கு தேர்தல் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எம்எல்ஏக்கள் அனைவரும் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இதில், கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அஜய் மக்கான்-47, சையத் நசீர் உசேன்-47 மற்றும் ஜி.சி.சந்திரசேகர்-45 வாக்குகள் பெற்று மூன்று பேரும் வெற்றி பெற்றனர். மேலும் பாஜ சார்பில் போட்டியிட்ட நாராயண சா.பாண்டே 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மஜத-பாஜ கூட்டணி சார்பில் போட்டியிட்ட குபேந்திரரெட்டி 36 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். பாஜ எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகர் கட்சி மாறி காங்கிரசுக்கு வாக்களித்ததால் பரபரப்பு நிலவியது. மேலும், பாஜ எல்லாபுரா தொகுதி எம்எல்ஏ சிவராம் ஹெப்பார் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் உச்சகட்ட பரபரப்பு நடந்தது. 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரஸ் 40, பாஜ 25, சுயேச்சைகள் 3 இடங்களை பிடித்துள்ளனர். இதில் 3 சுயேச்சைகள் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் சுயேச்சைகள் 3 பேரும் கட்சி மாறி வாக்களித்தனர்.

இதனால் காங்கிரஸ் வேட்பாளர் சிங்வியும், பாஜ வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனும் தலா 34 இடங்களுடன் சம நிலையை அடைந்தனர். இதைத் தொடர்ந்து பெயரை குலுக்கி போட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் பாஜ வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். இதனால் இமாச்சலில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல உபியிலும் அதிரடியான பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறின. ஏற்கனவே நேற்று முன்தினம் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் 8 எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இதனால் அவர்கள் கட்சி மாறி வாக்களிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் கொறடா மனோஜ் குமார் பாண்டே தனது பதவியை ராஜினாமா செய்து காலையிலேயே அதிர்ச்சி தந்தார். அவருடன் சேர்ந்த சமாஜ்வாடியின் 7 எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்தனர். அதோடு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ஒருவரும், ஜெயந்த் சவுத்திரியின் ராஷ்டிரிய லோக் தளம் எம்எல்ஏவும் பாஜவுக்கு வாக்களித்தார். இதனால் தேர்தல் நடந்த 10 இடங்களில் பாஜ 8ல் வெற்றி பெற்றது. மீதமுள்ள 2 இடங்களில் சமாஜ்வாடி வெற்றி பெற்றது. மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தலில் பல்வேறு எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்தது தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

* கடும் நடவடிக்கை அகிலேஷ் காட்டம்
தேர்தலுக்கு முன்பாக பேட்டி அளித்த சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ‘‘தேர்தலில் வெற்றி பெற பாஜ அனைத்து தந்திரங்களையும் கையாளலாம். இந்த சூழலை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாம் என சில எம்எல்ஏக்களுக்கு அவர்கள் உறுதி அளித்திருக்கலாம். எனவே பாஜவுக்கு ஆதரவு தருபவர்கள் தாராளமாக செல்லட்டும். ஆனால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

* மாநிலங்களவை தேர்தல் முடிவு
உத்தரப்பிரதேசம் தேர்தல் நடந்த இடங்கள்-10
பாஜ-8, சமாஜ்வாடி-2

கர்நாடகா தேர்தல் நடந்த இடங்கள்-4
காங்.-3, பாஜ-1

இமாச்சல் தேர்தல் நடந்த இடங்கள்-1
பாஜ

* 6 எம்எல்ஏக்கள் கடத்தல் ஆட்சி கவிழும் ஆபத்து
இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சுகு அளித்த பேட்டியில், ‘‘எங்கள் கட்சியின் 6 எம்எல்ஏக்களை அரியானா காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வாகனத்தில் அழைத்து கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என எம்எல்ஏக்களின் குடும்பத்தினருக்கு கூட தெரியவில்லை. எதிர்க்கட்சி செய்யும் போக்கிரிதனத்தை இமாச்சல் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்’’ என்றார்.

தோல்வி அடைந்த வேட்பாளர் சிங்வி கூறுகையில், ‘’25 எம்எல்ஏக்களை கொண்ட பாஜ, எதிர் போட்டியாளரை நிறுத்தும் போதே, வெற்றிக்காக வெட்கமின்றி எதையும் செய்யத் தயார் என்ற செய்தியை தந்துள்ளனர்’’ என்றார். இதற்கிடையே, சுக்விந்தர் சிங் சுகு அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் பாஜ நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையிலான அரசை கவிழ்ப்போம் என்று பாஜ தலைவர்கள் கூறியுள்ளனர்.

You may also like

Leave a Comment

7 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi