திருப்போரூர்: அலைச்சறுக்கு படகுமூலம் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை செங்கல்பட்டு அருண்ராஜ் கலெக்டர் துவக்கிவைத்தார். திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவளம் ஊராட்சி கடற்கரையில், நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் அலைச்சறுக்கு வீரர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருமான அருண்ராஜ் கலந்துகொண்டு அலைச்சறுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கோவளம் மீனவர் பகுதியை சேர்ந்த அலைச்சறுக்கு போட்டிகளில் பங்கு பெறும் மீனவர்கள் அலைச்சறுக்கு படகு மூலம் ”என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற வாசகம் பொருந்திய கொடியை ஆழ் கடலில் ஏந்தியவாறு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயணசர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், பயிற்சி சார் ஆட்சியர் பிரியா, பயிற்சி உதவி ஆட்சியர் ஆனந்த்குமார், சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் மற்றும் அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.