Wednesday, May 15, 2024
Home » செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து 6 ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து 6 ஆயிரம் கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

by MuthuKumar

சென்னை: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் 4,000 கனஅடியும், புழல் ஏரியில் இருந்து 2000 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

நேற்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், 22.53 அடி தண்ணீர் இருந்தது. அதேபோன்று கொள்ளளவு 3,645மில்லியன் கன அடியில் 3,256 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. மேலும், ஏரிக்கு நீர்வரத்து 3000 கன அடியாக இருந்தது. இதனால், பாதுகாப்பு கருதி நேற்று காலை 8 மணிக்கு ஏரியின் 5வது கண் மதகு வழியாக 3,500 கன அடியும், 19வது கண் மதகு வழியாக 2500 கனஅடியும் என 6,000 கன அடி திறந்து விடப்பட்டது. எனவே, கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலமும், ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்பகுதி மக்களுக்கு செல்போனில் வெள்ள அபாயம் எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. பின்னர், நேற்று பிற்பகல் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுவது, 4000 கன அடியாக குறைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புழல் ஏரி: சென்னை புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புழல் ஏரிக்கு தற்போது நீர்வரத்து 600 கன அடியாக உள்ளது. இதனால், முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் 200 கன அடி மட்டும் திறக்கப்பட்டது. நேற்று காலை 6 மணி அளவில் நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை 9.30 மணியளவில் 2 ஆயிரம் கன அடியாக நீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக உபரிநீர் கால்வாய் செல்லும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi