சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூரில் இரண்டு அடுக்கு கட்டடத்தை ஜாக்கி மூலம் தூக்கிய போது மேற்கூரை சரிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். தாம்பரம் அடுத்த சேலையூரில் கர்ணம் தெருவில் லெட்சுமி என்பவருக்கு 2 அடுக்குமாடி வீடு உள்ளது. அவரது வீட்டின் தரைதளத்தை தனியார் நிறுவனம் மூலம் உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த 11 ஊழியர்கள் அந்த வீட்டை ஜாக்கி மூலம் 2 அடி உயர்த்த முடிவு செய்து அதற்கான பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அதிகாலையில் இருந்து நடைபெறும் இந்த பணி நடைபெறும் நிலையில் திடீரென மேற்கூரை பகுதி மட்டும் சரிந்து விழுந்தது.
அந்த இடிபாட்டில் 3 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மற்றும் மேடவாக்கம் பகுதி தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு 3 தொழிலாளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அதில் பேஸ்கர் (28) என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் மற்றொரு தொழிலாளி ஓம்கார் என்பவருக்கு கால் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றொருவர் லேசான காயங்களோடு மீட்கப்பட்டார். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு நேரில் சென்ற சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.