ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் பகுதியை சேர்ந்த கோகுல் (38). இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் இயங்கி வரும், கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், மனத வள மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிற்சாலைக்கு வந்த கோகுலை, 3 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து, தொழிற்சாலையின் உள்ளே நுழைந்து கோகுலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில், பலத்த காயமடைந்த கோகுலை, சக ஊழியர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கோகுல், தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், இதுகுறித்து அப்பெண்கள் தங்கள் உறவினர்களிடம் தெரிவித்ததால், பெண்ணின் உறவினர்கள் கோகுலை அரிவாளால் வெட்டிய தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், கோகுலை வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கோகுலை மர்ம நபர்கள் 3 பேர் அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.