Saturday, May 18, 2024
Home » சிற்பமும் சிறப்பும்: அமிர்தகடேஸ்வரர் ஆலயம்

சிற்பமும் சிறப்பும்: அமிர்தகடேஸ்வரர் ஆலயம்

by Kalaivani Saravanan

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: அமிர்தகடேஸ்வரர் ஆலயம், மேலக்கடம்பூர், கடலூர் மாவட்டம்.

காலம்: முதலாம் குலோத்துங்க சோழன் (பொ.ஆ.1070-1120).

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் பல முக்கிய நிகழ்வுகளின் களமாகத்திகழ்ந்தது கடம்பூர். காவிரி வடகரையில் உள்ள சிவாலயங்களுள் 34-வதாக அமைந்துள்ள இந்த தேவாரப் பாடல் பெற்ற தலம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்புப் பெற்றது.

‘‘…கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும்…’’
– எட்டாம் திருமுறை, திருவாசகம்.

நாயன்மார்களால் பாடப் பெற்றதால் 6-7-ஆம் நூற்றாண்டிலிருந்தே இக்கோயிலில் சிறப்பான வழிபாடு நிகழ்ந்திருப்பதை அறியலாம். முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின்போது, ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று காணும் வடிவில் கோயில் அமைக்கப்பட்டது. பின்னர், நகரத்தார் மூலமாகவும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கரக்கோயில்அப்பரின் பாடல் மூலமாக அக்காலத்தில் இருந்த ஏழு வகை கோயில்கள் பற்றி அறியலாம்.

அவை ஆலக்கோயில், இளங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், பெருங்கோயில். கரக்கோயில் என்பது வட்டவடிவமான விமானத்துடன், சக்கரங்களுடன் தேர் போன்ற வடிவமைப்பைக் கொண்டது. சிற்பக்கலை சிறப்பு வாய்ந்த இச்சிவாலயம், கரக்கோயில் வகையைச்சார்ந்து, குதிரைகள் இழுத்துச் செல்லும் தேர் வடிவக் கருவறையுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலினுள் நுழைந்தவுடன், ஆலய அமைப்பு, சிற்பங்களின் நேர்த்தி, குறுஞ்சிற்பங்களின் நுணுக்கம் என ஒவ்வொரு அம்சத்திலும் மனம் லயித்துவிடும்.

தெய்வத் திருவுருவங்கள்

முதல் தளத்தில் நின்ற நிலையில் வீணாதரர், மேல் மாடங்களில் யோக நிலையில் பிரம்மா, கோஷ்டங்களில் அமர்ந்த நிலையில் உமையின் தாடையை வருடியபடி ஆலிங்கன மூர்த்தி, நின்ற நிலையில் கங்காதரர் அருகில் நாணிய கோலத்தில் உமை, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, சூரியன், சந்திரன், தேவேந்திரன் ஆகிய சிற்பங்களின் பேரழகு பிரமிக்க வைக்கின்றன. கருவறை புறச்சுவரின் மேல் பகுதியில் உள்ள, நாட்டிய கரணங்கள், ஆடற்கலை பெண்டிர் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை.

இறைவன்: அமிர்தகடேஸ்வரர்

இறைவி: சோதி மின்னம்மை.

You may also like

Leave a Comment

four × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi