கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் நான், 50 ஆண்டு காலம் பணியாற்றினேன். 2 முறை கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தேன். கடந்த சட்டமன்ற தேர்தலில்போது எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கப்பட்ட பி.ஆர்.ஜி.அருண்குமார், தனக்கு பணியாற்றுமாறு என்னை வேண்டினார். நானும் வேலை செய்தேன், ஆனால், கட்சி தலைமையில் இருந்து என்னை கண்டுகொள்ளவில்லை, ஓரம் கட்ட துவங்கினர்.
நான், அங்கு இருந்தவரை அதிமுகவுக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. உண்மையாக இருந்தேன். ஆனாலும், என்னை ஓரம் கட்டினார்கள். பிறகு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாட்டின்பேரில் திமுகவில் இணைந்தேன். மரியாதை இல்லாத கட்சியில் இருக்கவேண்டாம் என்று, அதிமுகவில் இருந்து விலகினேன். நான், சாதாரண வார்டு உறுப்பினர் பதவியில் இருந்து, ஊராட்சி தலைவராக உயர்ந்து, பல்வேறு மட்டங்களில் பணியாற்றியதால் மக்கள் எனக்கு ஆதரவளித்தார்கள். எனது சொந்த செல்வாக்கில் இரண்டு முறை எம்எல்ஏ ஆனேன்.
அதிமுக உடைந்தபோது, ஓபிஎஸ் அணியில் இருந்தேன். அப்போது அவர்கள் கூவத்தூரில் இருந்தார்கள். கடந்த 1986ம் ஆண்டில் இருந்து பணியாற்றிய என்னை ஒதுக்கினார்கள். அதிமுக அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்திலேயே மிகப்பெரிய அரசியல் துரோகி. அவரது சிரிப்பு துரோகத்தின் சிரிப்பு. உதயகுமார் முதல் அனைவரும் சசிகலா காலில் விழுந்து அமைச்சர்களாக வந்தவர்கள்தான். அவர்களால், இல்லை… என சத்தியம் செய்ய முடியாது. அனைவரும் காலில் விழுந்து பதவி வாங்கிவிட்டு, தற்போது சசிகலாவிற்கு துரோகம் செய்துள்ளனர். நான், அதிமுகவில் நெஞ்சை நிமிர்த்தி பணியாற்றியவன். ஜெயலலிதா காலில்கூட விழாதவன். இவ்வாறு அவர் கூறினார்.