Sunday, September 1, 2024
Home » கவலை தீர்க்கும் புடலை சாகுபடி!

கவலை தீர்க்கும் புடலை சாகுபடி!

by Porselvi

காய்கறிகளைப் பயிர் செய்யும் விவசாயிகள் எப்போதும் கைவிடப்பட மாட்டார்கள். நமது உழைப்புக்கு ஏற்றவாறு தினசரி வருமானம் தருவதில் காய்கறிகளுக்கு நிகராக வேறு எந்தப் பயிர்களும் நிச்சயம் இருக்காது. அந்த வகையில் புடலங்காய் சாகுபடியில் அமோகமான விளைச்சலைப் பெற்று நல்ல வருமானம் பார்த்து வருகிறார்கள் தஞ்சை மாவட்டம் சின்னையன்குடிகாட்டை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜூம், அவரது மகன் கனகசபாபதியும். அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, புடலங்காயை அறுவடை செய்து விற்பனைக்கு எடுத்துச் செல்லும் முனைப்பில் இருந்தனர். அதற்கிடையே நம்மிடமும் பேசினர். “ எங்களுக்கு விவசாயம்தான் பூர்வீகத்தொழில். பல பயிர்களை சாகுபடி செய்திருக்கிறோம். தற்போது புடலங்காய் சாகுபடியை செய்து வருகிறோம். புடலங்காய் சாகுபடி செய்வதற்கு, முதலில் நிலத்தை நன்றாக 3 அல்லது 4 முறை உழவு செய்வோம். கடைசி உழவின்போது 20 டன் மக்கிய தொழு உரம் இடுவோம். இந்தத் தொழுஉரம்தான் செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. தொழுஉரத்தை இட்ட பின்னர் 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல்மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும். இவ்வாறு உழுது தயாரான நிலத்தில் புடலங்காய் நன்கு வளர்ச்சி அடையும்.

எங்களது 200 குழி நிலம், அதாவது அரை ஏக்கரை விட கூடுதலான நிலத்தில் சுவேதா ரக புடலங்காயை சாகுபடி செய்திருக்கிறோம். இதற்கு 900 விதைகள் தேவைப்பட்டது. விதையை 2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு 4 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த 3 நாற்றுகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும். செடி நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். இதனால் தேவைப்படும்போது களையெடுப்பு மேற்கொள்வோம்.புடலங்காய்க்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும். இதனால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வேர்கள் வலுவாக நிலத்தில் பதிந்து செடிகள் ஆரோக்கியமாக வளரும். இதனால் காய்கள் நீண்டு செழிப்பாக வளரும்.

புடலங்காய்க்கு தண்ணீர்ப் பாசனம் முக்கியம். விதை ஊன்றியவுடன் பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். இதனால் செடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துவிடும். இதற்கு அதிக தண்ணீரும் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் தேவையான தண்ணீரும் குறைந்து விடக்கூடாது. இப்படி நிலத்தை உழுது, தொழு உரம் இட்டு பராமரித்து வந்தால் செடி நன்றாக வளரும். கொடிகள் நன்கு படர்ந்து வளர பந்தல் அமைப்பது அவசியம். புடலைக்கொடி வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியம். விதை முளைத்து கொடி வரும்போது, கொடியை மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்தோ ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும். செடிகள் வளர்ந்து வரும் இடத்தில் கம்பி பந்தலும் பின்னர் வயல் முழுவதும் கொடி படர வலுவான கயிற்றால் ஆன பந்தலும் அமைப்போம்.
வாரம் இரண்டு முறை களை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். புடலங்காய் வயலில் நாங்கள் ஊடுபயிரும் செய்கிறோம். ஊடுபயிராக தக்காளி உள்ளிட்ட காய்கறிச் செடிகளை பயிரிடுகிறோம். இதனால் இரட்டை வருமானம் கிடைக்கிறது.

இலைப் பருவத்தில் எத்ரல் 250 பிபிஎம் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளித்தால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். இதே வளர்ச்சி ஊக்கியை ஒரு வாரத்துக்கு 3 முறை தெளிக்க வேண்டும். 70வது நாளில் செடிக்கு அருகில் மட்கிய தொழு உரம் 1 கிலோ போட வேண்டும். இதனால் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செடிகளுக்கு சத்துகள் கிடைக்கும். புடலங்காய்ச் செடியில் பழ ஈயின் தாக்குதல் இருக்கும். இந்த ஈக்களைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகளை பந்தலில் ஆங்காங்கே வைப்போம். இதனால் ஈக்கள் அதில் சிக்கி இறந்துவிடும். செடிகள் நன்கு படர்ந்து வளர்ந்த பின்னர் 40 முதல் 45 நாளில் பூக்கள் பூக்கும். அப்போது சிவப்பு வண்டு, சாறு பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் இருக்கும். இதற்கு பஞ்சகவ்யா அல்லது இயற்கை பூச்சிக்கொல்லியைத் தெளிப்போம். மேலும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி டினோகாப் அல்லது அரை கிராம் கார்பன்டாசிம் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்கலாம். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு கிராம் மாங்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்துகளில் ஒன்றை 10 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.விதை ஊன்றிய 70 நாள்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கும். ஒரு நாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் பந்தலில் நன்கு நீண்டு வளரும். குறைந்தது வாரத்திற்கு 500 கிலோ வரை அறுவடை செய்யலாம். ஒரு கட்டுக்கு 40 காய்கள் அதாவது 45 கிலோ இருக்கும்.

புடலங்காயைப் பொறுத்தவரை விலை நிர்ணயம் என்பது சராசரியாக ரூ.30 முதல் ரூ.45 வரை இருக்கும். உழவு, ஆட்கள் கூலி, பந்தல் அமைத்தல் போன்ற செலவுகளை தவிர்த்து பார்த்தால் மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம். சரியான முறையில் பராமரிப்பு செய்தால் இன்னும் கூடுதலாக அறுவடை செய்யலாம். நாங்கள் புடலங்காயை தஞ்சை பகுதியில் வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடுவோம். மேலும் மக்களும் தேடிவந்து வாங்கி செல்கிறார்கள். இதனால் எங்களுக்கு புடலங்காயைச் சந்தைப்படுத்துவதில் எந்த சிரமமும் இல்லை. விற்பனை செய்யும் காய்களுக்கு உரிய பணத்தையும் உடனடியாக தந்துவிடுகிறார்கள். இதனால் புடலங்காய் சாகுபடி எங்களுக்கு மகிழ்ச்சியான சாகுபடியாக இருக்கிறது’’ என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்கள் கோவிந்தராஜூம், கனகசபாபதியும்.
தொடர்புக்கு:
கனகசபாபதி : 95854 15108

 

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi