மும்பை: சரத்பவாரின் பேரன் ரோகித் பவாருக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை முடக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் பேரன் ரோகித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ. ரோகித் பவாருக்கு புனேயில் பாராமதி அக்ரோ லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அவுரங்காபாத், கன்னாட் கிராமத்தில் இருக்கும் கன்னாட் எஸ்.எஸ்.கே. என்ற சர்க்கரை ஆலையை ஏலம் எடுத்தது.இந்த சர்க்கரை ஆலை மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கியில் வாங்கிய ரூ.80 கோடி கடனை திருப்பி தரவில்லை. இதனால் வங்கி அந்த ஆலையை பறிமுதல் செய்தது. பின்னர் ஏலத்தில் விட்டது. ரோகித் பவாரின் நிறுவனம் இந்த ஆலையை ஏலத்தில் எடுத்தது. ஏலம் எடுத்ததில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுகிறது.
இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் பணபரிவர்த்தனை மோசடி நடந்திருப்பதாக கூறி தனியாக எப்.ஐ.ஆர்.பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ரோகித் பவார் இரண்டு முறை அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இந்த நிலையில் ரூ.50 கோடி மதிப்பிலான கன்னாட் எஸ்.எஸ்.கே. சர்க்கரை ஆலையை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.