புதுடெல்லி: மக்களவை தேர்தலில் கொள்கை அடிப்படையில் பாஜவுடன் இணைந்து பணியாற்ற தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது. ஆந்திரபிரதேசத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. 175 பேரவை தொகுதிகளை கொண்ட ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திர பாபு நாயுடு, நேற்று முன்தினம் இரவு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அமித் ஷா இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணும் உடனிருந்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான ரவீந்திர குமார், “மக்களவை தேர்தலில் கொள்கை அடிப்படையில் தெலுங்கு தேசம், பாஜ, ஜன சேனா கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்து முடிந்துள்ளன” என்று கூறினார்.