புதுடெல்லி: பாகிஸ்தானில் இந்திய கைதி சரப்ஜித் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மர்ம நபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த விவசாயி சரப்ஜித் சிங்(49). இவர் கடந்த 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லை அருகே இந்தியா- பாகிஸ்தான் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற புகாரில் பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் பாகிஸ்தானின் லாகூர், பைசல்பாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு சரப்ஜித் சிங் தொடர்பு உள்ளதாக கூறி, 1991ம் ஆண்டு பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சரப்ஜித் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. பாகிஸ்தானின் உயர் பாதுகாப்பு மிக்க கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங், கடந்த 2013ம் ஆண்டு சக கைதிகள் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் சரப்ஜித் கொலை தொடர்புடைய குற்றவாளி தம்பா என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சையத்தின் நெருங்கிய கூட்டாளியான அமீர் சர்பரஸ் தம்பா என்பவர் லாகூரில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.